'மதிப்பெண்ணுக்கு இடையில் வித்தியாசம்' : நீட் மறுதேர்வு குறித்து தமிழக மாணவர்கள் கூறுவது என்ன?

 மாணவி ஆர்யா சிங்
படக்குறிப்பு, தேர்வு முடிவுகள் வெளியானபோது, அவரது மதிப்பெண் 540 எனக் காட்டியுள்ளது. ஆனால், அடுத்த சில மணிநேரங்களில் 167 என மாறியிருந்ததாக மாணவி ஆர்யா சிங் கூறியுள்ளார்.
    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

நீட் தேர்வு குளறுபடிகளை சரிசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் டெல்லி ஜந்தர் மந்தரில் காக்ரோச் ஜனதா கட்சி தலைமையில் மாணவர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில், நீட் மறுதேர்வில் குளறுபடிகள் நடந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

எதிர்பார்த்த மதிப்பெண்ணுக்கும் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட மதிப்பெண்ணுக்கும் இடையே முரண்பாடு உள்ளதாக, தேர்வு எழுதிய மாணவர்கள் கூறுகின்றனர்.

இதற்குப் பதில் அளித்துள்ள தேசிய தேர்வு முகமை, மாணவர்கள் தெரிவித்துள்ள புகார்களை ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது.

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (NEET - UG) கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், தேர்வு நடப்பதற்கு முன்னரே வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

நீட் நுழைவுத் தேர்வை மாணவர்கள் எழுதிய நிலையில், குற்றச்சாட்டு காரணமாக மே 12 ஆம் தேதி நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. வினாத்தாள் கசிந்தது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வரும் நிலையில், வழக்கில் பத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுதேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தியது. இந்தத் தேர்வுக்கு 22.79 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் சுமார் 20 லட்சம் பேர் தேர்வெழுதினர். இவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் 12 இந்திய மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது.

நீட் மறுதேர்வு முடிவுகள் கடந்த 16 ஆம் தேதி வெளியானது. இதில் 11.21 லட்சம் மாணவர்கள் மருத்துவப் படிப்பு சேர்க்கைக்குத் தகுதிபெற்றுள்ளதாக, தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.

இவர்களில் 19 மாணவர்கள் 720க்கு 700 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் 90,780 மாணவர்கள் 500 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்றுள்ளதாகவும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது.

'மதிப்பெண்ணில் வித்தியாசம்'

நீட் தேர்வு, தேசிய தேர்வு முகமை

பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்
வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

இந்தநிலையில், இளநிலை நீட் மறுதேர்வில் பங்கேற்ற மாணவர்களில் சிலர், தாங்கள் சுயமதிப்பீடு செய்த மதிப்பெண்ணுக்கும் தேசிய தேர்வு முகமை வெளியிட்ட முடிவுகளுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம், கான்பூரை சேர்ந்த மாணவி ஆர்யா சிங் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "தேசிய தேர்வு முகமை வெளியிட்ட விடைக் குறிப்பின் (answer key) அடிப்படையில் எனக்கு 609 மதிப்பெண் வரவேண்டும்" என்கிறார்.

தேர்வு முடிவுகள் வெளியானபோது, அவரது மதிப்பெண் 540 எனக் காட்டியுள்ளது. ஆனால், அடுத்த சில மணிநேரங்களில் 167 என மாறியிருந்ததாக மாணவி ஆர்யா சிங் கூறியுள்ளார்.

தன்னுடைய ஓ.எம்.ஆர் தாளின் வரிசை எண் 3823333 என இருந்ததாகவும் பின்னர் 3824338 என மாறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார். "நீட் மறுதேர்வுக்காக கடினமாக படித்த பிறகும் இவ்வளவு குறைவான மதிப்பெண் எப்படி சாத்தியமானது?" என அவர் கேள்வியெழுப்பியிருந்தார்.

இதுதொடர்பாக, தேசிய தேர்வு முகமைக்கு மின்னஞ்சல் மூலமாக மாணவி ஆர்யா சிங் புகார் அனுப்பியுள்ளார்.

இதே கருத்தைத் தெரிவித்துள்ள லக்னௌவை சேர்ந்த மாணவி பிரதிபா திரிவேதி, "தற்காலிக விடைக் குறிப்புடன் தனது ஓ.எம்.ஆர் தாளை சரிபார்த்தபோது சுமார் 640 மதிப்பெண் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால், 38 மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டது" எனக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் அனுப்பியும் எந்தப் பதிலும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்வு முடிந்த பிறகு அவர்கள் எழுதிய ஓ.எம்.ஆர் தாளின் நகல், பி.டி.எஃப் வடிவத்தில் அவர்களின் இமெயில் முகவரிக்கு தேசிய தேர்வு முகமை அனுப்புவது வழக்கம்.

அதனை நகல் எடுத்து தேசிய தேர்வு முகமை வெளியிட்ட விடைக் குறிப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது குறைகள் கண்டறியப்பட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஞ்சியை சேர்ந்த மாணவி லட்சயா சிங், "நீட் மறுதேர்வில் 660 மதிப்பெண்ணை எதிர்பார்த்தேன். ஆனால், தேசிய தேர்வு முகமை வெளியிட்ட அறிவிப்பில் 116 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது" எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

தமிழ்நாட்டில் சுமார் 1.36 லட்சம் மாணவர்கள் நீட் மறுதேர்வை எழுதியுள்ளனர். இவர்களில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் வேங்கடபதி வேலாயுதம் என்பவர், இந்திய அளவில் 12வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 720 மதிப்பெண்ணுக்கு 705 மதிப்பெண் பெற்றுள்ளார்.

நீட் மறுதேர்வு எழுதிய மாணவர்கள் சிலரிடம் பிபிசி தமிழ் பேசியது.

"மே 3 ஆம் தேதி எழுதிய நீட் தேர்வு மிக எளிதாக இருந்தது. ஆனால், ஜூன் 21 ஆம் தேதி நடத்தப்பட்ட தேர்வு கடினமாக இருந்தது" என்கிறார், திருப்பூரில் வசித்து வரும் மாணவி அபிராமி.

நாமக்கல்லில் தனியார் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ் 2 படிப்பை முடித்த இவர், ஓராண்டாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த 16 ஆம் தேதி வெளியான நீட் மறுதேர்வு முடிவில் 720க்கு 446 மதிப்பெண்களை இவர் பெற்றுள்ளார். இவரது தந்தை குமரகுருபரன் தனியார் நிறுவனத்தில் பணிசெய்து வருகிறார்.

"தேர்வில் 550 மதிப்பெண்ணுக்கு மேல் வரும் எனக் கணக்கிட்டிருந்தேன். ஆனால், குறைவான மதிப்பெண்ணே கிடைத்தது. இதனால் அரசுக் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" என பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார்.

ஆனால், இதுதொடர்பாக தேசிய நீட் தேர்வு முகமைக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் எதையும் மாணவி அபிராமி அனுப்பவில்லை.

நீட் தேர்வு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கோப்புப்படம்

'கடும் மனஉளைச்சல் ஏற்பட்டது'

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டு மறுதேர்வு என அறிவித்தபோது, கடும் மனஉளைச்சலுக்கு ஆளானதாகக் கூறும் அபிராமி, "தேர்வை நேர்மையாக படித்து எதிர்கொள்ளத் தயாராகும்போது வேறு சிலர் எளிதாக வினாத்தாள் பெற்றுவிடுகின்றனர். இது வேதனையைத் தருகிறது" என அவர் குறிப்பிட்டார்.

"இரு தேர்வுக்கும் இடைவெளியாக ஒரு மாதம் அவகாசம் இருந்தது. அதற்குள் சுமார் 100 பாடங்களைப் படித்து அதற்கான மாதிரி தேர்வை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. இது சவாலாக இருந்தது" என்கிறார் அவர்.

நீட் தேர்வுக்கு விடுதியில் தங்கிப் படித்ததால் சுமார் நான்கு லட்ச ரூபாய்க்கு மேல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

டெல்லி ஜந்தர் மந்தரில் நடக்கும் மாணவர் போராட்டம் குறித்துப் பேசிய அபிராமி, "போராட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. எந்தவித குளறுபடியும் இல்லாமல் நீட் தேர்வு நடக்க வேண்டும். இது ஒன்றையே மாணவர்கள் விரும்புகின்றனர்" என்கிறார்.

நீட் தேர்வு முறை காரணமாக தன்னுடன் படித்த மாணவிகள் பலர், மருத்துவத்தைத் தவிர்த்து வேறு பாடப் பிரிவுகளை தேர்வு செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

'பொறுப்பை உணர்ந்தால் போதும்'

 மாணவர் முனவர்கான், நீட் தேர்வு
படக்குறிப்பு, நீட் தேர்வில் கடந்தமுறை ஒரே ஒரு மாணவர் மட்டுமே தங்கள் பள்ளியில் இருந்து தேர்வானதாகக் கூறும் முனவர்கான், "மருத்துவம் படிப்பது கனவாக இருந்ததால் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்து படித்தேன். தேர்வு சரியாக நடத்தப்பட்டால் தான் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை வரும்" எனக் கூறுகிறார்.

இதே கருத்தை முன்வைக்கிறார், உடுமலைப்பேட்டை அரசு மாதிரி பள்ளியில் படித்து நீட் மறுதேர்வை எழுதிய மாணவர் முனவர்கான். இவர் நீட் தேர்வில் 720க்கு 557 மதிப்பெண் பெற்றுள்ளார்.

பல்லடத்தில் வசித்து வரும் மாணவர் முனவர்கானின் தந்தை நூர்கான் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். ஓராண்டாக படித்து நீட் மறுதேர்வில் தேர்ச்சி பெற்றதாக முனவர்கான் கூறுகிறார்.

"மே மாதம் நடந்த நீட் தேர்வில் 620 மதிப்பெண் வரும் என எதிர்பார்த்தேன். ஆனால், மறுதேர்வில் 557 மதிப்பெண்ணே கிடைத்தது. புதிதாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மறுதேர்வு மிகவும் கடினமாக இருந்தது" என்கிறார் அவர்.

டெல்லியில் நடக்கும் போராட்டம் குறித்துப் பேசும் மாணவர் முனவர்கான், "தங்களுக்கான பொறுப்பை உணர்ந்து தேசிய தேர்வு முகமை செயல்பட வேண்டும் என்பது தான் மாணவர்களின் எண்ணமாக உள்ளது. அந்தவகையில், போராட்டம் சரியானதாக பார்க்கிறேன்" என்கிறார்.

நீட் தேர்வில் கடந்தமுறை ஒரே ஒரு மாணவர் மட்டுமே தங்கள் பள்ளியில் இருந்து தேர்வானதாகக் கூறும் முனவர்கான், "மருத்துவம் படிப்பது கனவாக இருந்ததால் சுமார் ஐம்பதாயிரம் ரூபாய் வரை செலவு செய்து படித்தேன். தேர்வு சரியாக நடத்தப்பட்டால் தான் மாணவர்கள் மத்தியில் நம்பிக்கை வரும்" எனக் கூறுகிறார்.

மதிப்பெண் குறைவு என மாணவர்கள் கூறும் குற்றச்சாட்டுகளை தேசிய தேர்வு முகமை மறுத்துள்ளது. இதுதொடர்பாக, தேசிய தேர்வு முகமையின் எக்ஸ் தள பக்கத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

'அனைத்து புகார்களையும் கணிகாணித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. ஆய்வுக்காக சமர்ப்பிக்கப்பட்ட பல ஓ.எம்.ஆர் தாள்கள் போலியானவை மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்பட்டவை எனத் தெரியவந்துள்ளது' என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

'அசல் ஓ.எம்.ஆர் தாள்களை மட்டும் மாணவர்களும் பெற்றோரும் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுவதாகவும் போலியான அல்லது செயற்கை நுண்ணறிவு மூலமாக உருவாக்கப்பட்ட ஓ.எம்.ஆர் தாள்களை சமர்ப்பித்தால் புகார் அளித்தவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' எனவும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்துப் பேசியுள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், "நாடாளுமன்றத்தில் நீட் தேர்வு குறித்து விவாதிக்கவும் இளைஞர்களின் நியாயமான கவலைகளுக்கு தீர்வு காணவும் எங்கள் அரசு தயாராக உள்ளது" எனக் கூறியுள்ளார்.

அதேசமயம், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதில் எந்த சமரசமும் இல்லை என, காக்ரோச் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இதையே, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு